" பாம்புன்னா புத்து இருக்கனும்
பருப்பு கடைய மத்து இருக்கனும்
தென்னை மரம்னா நெத்து இருக்கனும்
துபாஷ் விஜயன்னா கெத்து இருக்கனும் "
புளி விக்கிற , புண்ணாக்கு விக்கிற , புஸ்வாணம் விக்கிற பார்ட்டி கூட இப்ப விசிட்டிங் கார்டு வெச்சுக்கிட்டு லாவுச மாவுச அடிக்குதுக..
அப்ப அம்ம கெத்து பார்ட்டிக எப்புடி இருந்துருக்கனும்..விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் விசிட்டிங் கார்டு ( 1930 களில் ) ஒன்றை கண்ணுக்கு கண்ணாகச் சேமித்து வைத்து இங்கு வெளியிட்டுள்ளேன்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள " காசீம் பிரதர்ஸ் " என்பது கான்பகதூர் துபாஷ் காதிறு சாஹிப் ஆரம்பித்த நிறுவனம்...காசீம் என்பது அவருடைய மகன் ஒருவரின் பெயர்.. இதில் தான் மானேஜிங் பங்காளியாக விஜயன் அம்பலம் இருந்தார்.
" விஜயன் அம்பலம் " என்ற பெயர்க் காரணம்....
இராமநாதபுரம் சேது மன்னரின் சேவையில் சிறந்து விளங்கிய அபிராமம் நூர்முஹம்மது என்பவருக்கு சேதுபதி மன்னர் சிறப்புகள் செய்து " விஜயன் அம்பலம் " என்ற விருதுப் பெயரையும் வழங்கினார்.( விஜயன் குடும்பங்களில் "நூர்,மீரா " என்ற பெயர்கள் நிறைய நபர்களுக்கு சூட்டப்பட்டு வருவதை இன்றும் நாம் காணலாம்). இந்நிகழ்ச்சி நடைபெற்று இருநூறு வருடங்களுக்கு மேலாகிறது.அவரது வழி வந்த வள்ளல் ( அப்துல் ரஹிமான் ) ஒருவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரான சோதுகுடி அப்துல் காதிர் ராவுத்தர் அவர்கள் " விஜயன் அப்துல் ரஹ்மான் அகப்பொருட் பல்துறைக்கோவை " ஒன்றைப் பாடியுள்ளார்.
ஆதாரம் : வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம் கமால் அவர்கள் எழுதிய " முஸ்லீம்களும் தமிழகமும் " என்ற நூல்...( புகைப்பட ஆதாரம் இணைப்பில் )
1930 ஆம் வருடம் இரங்கூன் மாநகருக்கு இந்தியாவின் பின்னாளில் 3வது குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாஹீர் ஹுசேன் அவர்களும் , இஸ்லாத்துக்காகவும் , இந்தியாவுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகி மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் அவர்களும் விஜயம் செய்தபோது " சோலிய முஸ்லீம் சமூகத்தின் அன்றைய தலைவரான விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலமும் , சோலிய முஸ்லீம் சமூகத்தின் இளைஞர் அணிச் செயலாளரான அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்களும் சங்கத்தின் சார்பாக வரவேற்றனர்.
அடுத்த நாள் மாநாடு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கௌரவ விருந்தினர்கள் இருவரும் ஏரிக்கரை ஒன்றின் ஓரத்தில் அமைந்த விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தின் அழகிய பங்களாவில் தங்கினர் அவர்களுக்கு பர்மிய , இந்திய உண்வு வகைகள் பரிமாறப்பட்டன..அந்த ஒரு நாள் சந்திப்பில் பல விடயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.
மேற்கண்ட நிகழ்வுகளை அறிஞர் அல்லாமா மு.கரீம் கனி அவர்கள் தான் எழுதிய " நான் கண்ட மாணிக்கம் " என்ற நூலில் குறிப்பிடுகிறார் ( புகைப்பட ஆதாரங்கள் பதிவில்.)
நீதி : " இருந்தாலும் இறந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும் "
0 comments:
Post a Comment